சாவோ பாவ்லோ: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 82.
கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார் பீலே. ஆனால், கடந்த சில நாட்களாக, அவரின் உடல்நிலை பலவீனமடைந்தது. அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அவர் வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
கரோனா தொற்றால் அவரது நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவருக்கு சிறுநீரகம் மற்றும் இருதய செயல்பாடுகள் குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பீலேவின் மகள் கெல்லி நாஸிமென்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பீலேவுடன் இருந்ததாக தெரிவித்திருந்தார். பீலேவின் மகன் தந்தையின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தந்தையே நீங்கள் தான் எனது வலிமை என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது பீலே மரணமடைந்துள்ளார். பீலே உயிரிழந்ததை அவரின் மகள் இன்ஸ்டாகிராம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் பீலேவின் இறப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
கால்பந்து வரலாற்றில் மூன்று உலகக் கோப்பைகளை வென்ற ஒரே வீரர் பீலே. 92 போட்டிகளில் 77 கோல்கள் அடித்து பிரேசிலின் ஆல்-டைம் டாப் ஸ்கோரராக இருக்கும் பீலே, 1940-ம் ஆண்டு பிறந்தவர். கால்பந்தாட்ட உலகின் மாபெரும் ஜாம்பவனாக இன்றும் விளங்குபவர். ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட கோல்கள் மட்டுமின்றி ஹாட்ரிக் கோல்களில் உலக சாதனையும் படைத்துள்ளார். தனது திறமை மற்றும் சாதனைகளுக்காக தனிப்பட்ட முறையிலும், அணியாகவும் பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். கால்பந்தாட்ட வீரர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் எக்காலத்திற்குமான மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரராகக் கருதப்படுகிறார்.