தனது கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தார் எனக் கூறப்படும் மனைவி, மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தனது கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து தன்னையும் இரண்டு பிள்ளைகளையும் தாக்கி தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என பெண்ணொருவர் நேற்றிரவு 11.30 மணியளலில் மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது இரத்த வெள்ளத்தில் நபர் ஒருவர் கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இதன்போது குறித்த நபர் பொலிஸாரினால் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணித்த நபர் இலக்கம் 33/1 கபுருகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையில் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மரணித்தவரின் மனைவி மஹியங்கனை பொலிஸாரினால் கைதுசெய்யப் பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.