மூன்றாவது தடவையாகவும் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் றோயல்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்தது.
முதல் ஓவரிலேயே காத்திருந்த அதிர்ச்சி
அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது முதல் ஓவரிலேயே டிரண்ட் போல்ட் மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆக, அடுத்த பந்திலேயே நமன் தீரும் டக் அவுட் ஆனார். அதன் பின்னர் இம்பேக்ட் வீரராக வந்த பிரேவிஸ் முதல் பந்திலேயே போல்ட் பந்துவீச்சில் பர்கரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியில் இறங்கிய இஷான் கிஷன் 16 ஓட்டங்களில் இருந்தபோது பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்தடுத்து பறிபோன விக்கெட்டுகள்
அடுத்து வந்தஅணித் தலைவர் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 21 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் திலக் வர்மா 32 ஓட்டங்களில் வெளியேற, மும்பை இந்தியன்ஸ் 09 விக்கெட்டுகளை பறிகொடுத்து 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

போல்ட், சாஹல் தலா 3 விக்கெட்டுகளும், பர்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ருத்ர தாண்டவம் ஆடிய வீரர்
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என தடுமாற, ரியான் பராக் ருத்ர தாண்டவம் ஆடி அணியை மீட்டார்.
இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் 15.3 ஓவரில் 127 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது அந்த அணியின் தொடர்ச்சியான 3வது வெற்றி ஆகும். அரைசதம் விளாசிய பராக் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.