யாழ் தீவக வலயத்திற்கு உற்பட்ட பாடசாலை ஒன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையிக் மின்சார இணைப்பு மீள வழங்கப்படாத நிலை காணப்படுகிறது.
ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே இவ்வாறான நிலை காணப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்ட பாடசாலையின் ஒருபகுதியில் கோட்டக் கல்வி அலுவலகம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
குறித்த பாடசாலையின் மின்சார கட்டணமும் கோட்டக் கல்விக்கு பயன்படுத்தும் பட்டியல் நிலுவையும் வலயக் கல்விப் பணிமனைக்கு அனுப்பப்பட போதிலும் உரிய காலப் பகுதியில் நிலுவை செலுத்தப்படாத காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மீண்டும் இணைப்பை செயல்படுத்துவதற்கு சுமார் 3500 ரூபா தண்ட பணம் கட்டப்பட வேண்டும்.

தண்டப் பணத்தை காட்டினால் தண்டப்பணம் கட்டியமை தொடர்பில் கணக்காய்வு விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதற்காக வலயக் கல்வி அலுவலகம் பணத்தை கட்ட பின்னடித்து வருவதாக அறிய முடிகிறது.
க.பொ.த சாதாரண பரீட்ச்சைகள் ஒரு வாரமாக ஆரம்பமாகிய இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 7 மாதங்களாக குறித்த பாடசாலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை நிலவுகின்ற நிலையில் யாழ் தீவகப் பகுதிகள் குடிநீருக்காக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த பாடசாலையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசொளகரிகங்களை எதிர் நோக்கிவருகின்றனர்.
இவ் விடயம் குறித்து தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் சி. ஞானசுந்தரனை தொடர்பு கொண்ட போது குறித்த விடயங்கள் அனைத்தையும் செவிமடுத்த பின் தொலைபேசியை நிறுத்திவிட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பாடசாலைக்கு மின்சாரம் துண்டிப்பு இடம்பெற்றமையை உறுதி செய்தார்.