ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உப்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர்.
இவ் விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஈரானின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மோசமான வானிலை நிலவியதால், ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது.

இந்த விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசியின் உடல் நேற்றைய தினம் (23-05-2024) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆயுதப்படை அதிகாரிகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர், மலையின் மீது மோதிய உடனேயே தீப்பிடித்து எரிந்ததாகவும், ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்தகட்ட விசாரணையில் விபத்து தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.